Wednesday, 15th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
குமாரபாளையம்: குமாரபாளையத்திலிருந்து சபரிமலைக்கு சேவை செய்ய ஐயப்ப பக்தர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அகிலபாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் ஆண்டுதோறும் சபரிமலைக்கு சேவை செய்ய ஐயப்ப பக்தர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை பல கட்டங்களாக அனுப்பி வைப்பது வழக்கம்.
நேற்று மூன்றாவது கட்டமாக ஐந்து நபர்கள் சேவைக்கு புறப்பட்டனர். இதுவரை 65 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
குமாரபாளையம் ஜெட் மண்டபத்திலிருந்து இவர்களை வழியனுப்பும் விழாவிற்கு மாவட்ட செயலர் ஜெகதீஷ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பிரபு உள்பட பலர் பங்கேற்றனர்.
மாவட்ட செயலர் ஜெகதீஷ் கூறியதாவது: சபரிமலை சேவைக்கு செல்லும் மாணவர்கள் அங்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், அன்னதானம் வழங்குதல், ஆக்சிஜன் சுவாசம் வழங்குதல், உடல்நலம் பாதித்த, மயங்கி விழுந்த நபர்களை மருத்துவமனையில் சேர்த்தல், இறந்தவர்களை அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு போய் சேர்த்தல், கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்திருத்தல் உள்ளிட்ட பல சேவைகள் செய்வார்கள்.
ஒவ்வொரு குழுவினர் 15 நாட்கள் சேவை செய்வார்கள். இவர்கள் அங்கிருந்து புறப்படும் முன்பு அடுத்த குழுவினர் செல்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.